Tuesday, September 3, 2013

Teachers Day Greetings Message From The Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ஆசிரியர் தின” வாழ்த்துச் செய்தி 

      எளிமையின் இருப்பிடமாகவும், உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
 காமுறுவர் கற்றறிந் தார்”

        -- என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அக்கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்ற வள்ளூவர் வழங்கிய கருத்திற்கேற்ப டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார்.



     ஆசிரியர் பணியின் அருமை பெருமைகளைக் குன்றாது, குறையாது போற்றிப் பாதுகாக்கும் எனது தலைமையிலான அரசு, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளித்திடும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 1660 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

       ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச் செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும். இத்தகைய சிறப்புமிக்க உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்கள் சமுதாய உணர்வோடு பணியாற்றி எதிர்காலத்தில் இந்த நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்திடும் ஒரு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து, ஆசிரியர் தினத்தினை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Wednesday, August 28, 2013

Sri Krishna Jayanthi greetings message of CM .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி 


    காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில் எனது இனிய “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

   கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளைக் கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலிலிருந்து வரிசையாக பதிய வைத்தும், பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழ வகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மகிழ்ச்சியடைவர்.

     செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விட்டு, சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, இறைவன் திருவடியை சரண் அடைபவர் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவர் என்கிறது கண்ணன் அருளிய கீதை.

      கீதையை அருளிய கண்ணன் அவதரித்த இந்தக் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களைப் பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும், அறச் செயல்களை மென்மேலும் வளர்த்து, தீமைகளை அகற்றி, நன்மைகள் பெருகச் செய்து, உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Monday, August 26, 2013

Tamil Nadu PR Honble Chief Minister Chaired a Meeting on fixing of Auto Fare.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 25.8.2013 

      அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கே சென்று சேர்ப்பதில் முக்கியப் பங்கினை வகிப்பவை ஆட்டோ ரிக்ஷாக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

       தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இவற்றில் சென்னைப் பெருநகரில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் 2007 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

      இதன் பின்னர், எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், தற்போதுள்ள கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓர் அலுவல் குழு அமைக்கப்பட்டது.

       இதற்கிடையில், ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணிகளையும் பரிசீலித்து ஒரு முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.



        இதனைத் தொடர்ந்து, எனது உத்தரவின் பேரில், ஆட்டோ ரிக்ஷா கட்டண நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில், அரசு அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு முத்தரப்புக் கூட்டம் 10.8.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்டோ கட்டணங்கள் எந்த அளவுக்கு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

         இதன் தொடர்ச்சியாக, 22.8.2013 அன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், உள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சட்டத் துறைச் செயலாளர் முனைவர் கோ. ஜெயச்சந்திரன், சென்னைப் பெருநகர காவல் ஆணையர் திரு. எஸ். ஜார்ஜ் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் திரு. ஏ.எல். சோமயாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

         இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் / ஆட்டோ உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பயனடையும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு

1. முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ ரிக்ஷா கட்டணம் 25 ரூபாய் என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்படும்.

2. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 விழுக்காடு இரவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

3. காத்திருப்புக் கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும்.

4. இந்தத் திருத்திய கட்டணம் இன்று முதல் (25.8.2013) நடைமுறைக்கு வரும்.

5. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரம் செய்யப்படும். இதன் அடிப்படையில் பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

6. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை 15.9.2013-க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

7. மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும்.

8. இது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னைப் பெருநகரில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தைக் காட்டும் கருவியுடன், அதாவது ழுடடியெட ஞடிளவைiடிniபே ளுலளவநஅ-உடன் கூடிய மின்னணு இலக்க அச்சடிக்கும் இயந்திரத்துடன், அதாவது, நுடநஉவசடிniஉ னுபைவையட ஞசiவேநச உடன் கூடிய மீட்டர், விலை ஏதுமில்லாமல் அரசு செலவில் பொருத்தப்படும். இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் வழிவகை ஏற்படும்.

9. ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை, அதாவது ஞயniஉ க்ஷரவவடிn-ஐ பயணிகள் அழுத்தலாம். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்து, அதன் அடிப்படையில் காவல் துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

10. ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தீவிரமாக கண்காணிக்கும். இந்தக் கண்காணிப்பின் போது, மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இது தவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும்.

11. ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9 

Revised fare table for Autorickshaws.

Revised fare table for Autorickshaws fitted with Electronic Digital Meter

Click here to enlarge

Wednesday, August 21, 2013

Fund For Infrastructure Development of Sports.

Sanction of fund for infrastructure development of Sports - dated 21 August 2013

        விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கும் உரிய முனைப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

       முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பத்து விளையாட்டுகளில் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடையே இந்தப் போட்டிகளின் தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த போட்டிகளை மேலும் வலுப்படுத்தி, போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டு போட்டிகளைப் (National Games) போன்று தமிழகத்தில் “முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்“ ஆண்டுதோறும் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

      இப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இப்போட்டிகளுக்கென 8 கோடியே 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

        இந்தக் கோப்பைக்கான போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளான கூடைப்பந்து, கைப்பந்து. ஹாக்கி, கால்பந்து, கபாடி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகு பந்து ஆகியவைகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு 204 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என ஒரு மண்டலத்திற்கு 1,632 பேர்கள் இவ்விளையாட்டில் பங்கேற்பார்கள். மொத்தத்தில் 204 பேர் தங்கப் பதக்கமும், 204 பேர் வெள்ளிப் பதக்கமும், 204 பேர் வெண்கலப் பதக்கமும் வென்று அதற்குரிய பரிசுத் தொகையை பெறுவார்கள்.



      விளையாட்டு வீரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக நவீன தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையத்தினை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகை புதிய கட்டடம் கட்டுவதற்கும், புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கும் செலவிடப்படும்.

     தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக் காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை, தலைமைச் செயலகத்தில் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும். இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக் கருவிகளை அமைக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும்.
*******
வெளியீடு:- இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9