Thursday, November 5, 2015

The Training in Traditional Arts for the Youth

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

"பாரம்பரிய கிராமியக் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தல் "

கலை பண்பாட்டுத்துறையின் அங்கமாகத் திகழும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், முத்தமிழான இயல், இசை, நாடகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு கலைப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தமிழக கலை வடிவங்கள் அழிந்து வரும் நிலையில், அக்கலைகளை இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சென்றால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதால், ஆர்வமுள்ள இளங்கலைஞர்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களைக் கொண்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளில் இளைய சமுதாயத்தினருக்கு பயிற்சி அளித்திட அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையினை செயல்படுத்திடும் நோக்கில், நாட்டுப்புறக் கலைகளான பொய்க்கால் குதிரை, கரகம், காவடி ஆகியவற்றில் ஒரு மாத பயிற்சி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் 15.11.2015-க்குள் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு தன்விவரக்குறிப்புடன் (Bio-Data) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் 30 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் (முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்). இப்பயிற்சியானது 23.11.2015 அன்று தொடங்கி ஒரு மாத பயிற்சியாக மாலை நேரத்தில் ( மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை) நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-24937471 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tuesday, November 3, 2015

Statement of CM on Special Buses for Deepavali Festival

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 3.11.2015

தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எனது உத்தரவின் பேரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வந்துள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி,

1. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 6.11.2015 அன்று 1,106 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,146 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 825 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 1,194 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

2. இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து 6.11.2015 அன்று 1,554 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,717 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 1,822 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 2,595 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை 7,688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

3. மொத்தத்தில் தீபாவளித் திருநாளை ஒட்டி, 6.11.2015 முதல் 9.11.2015 வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

4. இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 10.11.2015 முதல் 16.11.2015 வரை இயக்கப்படும்.

5. மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

6. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் றறற.வளேவஉ.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

7. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்


TN Minister Inaugurated the Dengue fever awareness programme in Chennai

Honble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons inaugurated the Dengue fever awareness programme in Chennai


Statement of CM on Calamity Relief Fund Assistance

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 4.11.2015.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முடிய பருவமழை தொடர்ந்து நீடிக்கும். கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நான் அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, பருவமழையின் போது உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படக் கூடும். அவ்வாறு பருவ மழையால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுளேன். பருவமழை காரணமாக ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு, சேதமடைந்த குடிசைகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி,
மழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 4 லட்சம் ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு 95,100 ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 5,000 ரூபாய்;
பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாய்;
மற்றும் 10 கிலோ அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய்;
பசு மற்றும் எருமை மாடு உயிரிழப்புக்கு 30,000 ரூபாய்;
ஆடு, பன்றி உயிரிழப்புக்கு 3,000 ரூபாய்;
கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய்;
என நிவாரண உதவித் தொகைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு புடவை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்படும்.

மழையால் பாதிக்கப்படும் நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுளேன்.

முழுவதும் பாதிக்கப்படும் கட்டு மரம் ஒன்றுக்கு 32,000/- ரூபாய் வழங்கவும், பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாய் வீதமும், முழுவதும் பாதிக்கப்படும் FRP வல்லம் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சம் 75,000 ரூபாய் வரையிலும்; பகுதி சேதமடையும் FRP வல்லம் ஆகியவற்றுக்கு 20,000 ரூபாய் என்ற வீதத்திலும்; முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 35 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்திலும்; பகுதி சேதமடையும் எந்திரப் படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய், கட்டுமரங்களுக்கான வலை சேதமடைந்தால் 10,000 ரூபாய்; படகுகளின் வெளிப்புறம் பொருத்தப்படும் எந்திரங்களுக்கு 5,000 ரூபாய் என்ற வீதங்களில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பருவமழையினால் சாலைகள், பாலங்கள், இதர அரசு கட்டடங்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க உரிய கருத்துருக்களை உடனுக்குடன் அனுப்ப அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

தோட்டக்கலை மற்றும் இயற்கை உரம் தயாரிக்க ஒரு நாள் பயிற்சி