Wednesday, January 8, 2014

Special buses for Pongal festival dated 8th January 2014.



        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி சௌகரியமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 10.1.2014 அன்று 600 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 1325 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 1175 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். 14.1.2014 அன்று பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.



     இதே போன்று சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 10.1.2014 அன்று 345 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

     மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை 6,514 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை உறவினர்கள், நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிட வசதியாக, இதே அளவிலான சிறப்புப் பேருந்துகளை 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     பொங்கல் பண்டிகையை ஒட்டி 300 கி.மீ. தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு, இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், Online Ticket Reservation System www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

     இதுதவிர கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி 14 முதல் 16 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

      பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அரசின் மேற்காணும் மக்கள் நல நடவடிக்கைகள், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வழிவகை செய்யும்.

Friday, January 3, 2014

Extension of time for applying - Honble Chief Minister Kanini Tamil Award - 2013.

      தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படவுள்ள ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2013-ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

       தற்போது, விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 20.1.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

      விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org)  இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

தமிழ் வளர்ச்சி இயக்குநர், 
தமிழ் வளர்ச்சி இயக்ககம், 
ஆல்சு சாலை, எழும்பூர், 
சென்னை – 600 008. 


PR From Tamil Nadu Arasu Cable TV Corporation Limited.


Competitions for School Students.

பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் நடத்தப்படும் சென்னை மாவட்ட கலைப்போட்டிகள் சென்னை மாவட்ட கலைப்போட்டிகள் 

      தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான கலைகளில் ஈடுபடும் வகையில் பல கலைகளில் பயிற்றுவிக்கிறது. சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக, குழந்தைகளிடையே மறைந்து கிடக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில், போட்டிகள் நடத்தியும் அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கிடையே மாநிலஅளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 9-12, 13-16 வயது வகைகளில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் சவகர் சிறுவர் மன்றச் செலவுகளிலேயே கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுவதுடன் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.7,500/- மூன்றாம் பரிசாக ரூ.5,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.


      சென்னை மாவட்ட கலைப் போட்டிகள் முறையே, 8.1.2014 அன்று பரதநாட்டிய போட்டி மற்றும் கிராமிய நடனப் போட்டியும், 9.1.2014 அன்று குரலிசைப் போட்டியும், 10.1.2014 அன்று ஓவியப் போட்டியும் நடைபெறவுள்ளது. 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவுகளில் போட்டிகள் சென்னை-28, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

     போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறந்த தேதி (Birth Certificate / Bonofide ) சான்றிதழ் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வயது வகைக்கும், ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்சம் 5 குழந்தைகள் ஒரு பள்ளியிலிருந்து அனுமதிக்கப்படுவர். பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய போட்டிகள் 5-8, 9-12 வயது வகை மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், 13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரையிலும், ஓவியப் போட்டிகள் அனைத்து வயது பிரிவு மாணவர்களுக்கும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும்,

      போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. மாவட்ட போட்டியில் 9-12, 13-14 வயது வகைப் பிரிவில் முதல்பரிசு பெற்ற மாணவர்களுக்கிடையே பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் அரசின் செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள்

1. பரதநாட்டியம் பரதநாட்டியம் 

 பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)

 தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக்கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

3. குரலிசை 

       கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், குழுப்பாடல்கள், அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.

 4. ஓவியம் 

      40X30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

5. வயது விவரம்

 (1.6.2013 அன்று உள்ளபடி 16 வயது)

 அ. 5 முதல் 8 வயது பிரிவு – 1.6.2005 முதல் 31.5.2008 வரை
 ஆ. 9 முதல் 12 வயது பிரிவு - 1.6.2001 முதல் 31.5.2005 வரை
 இ. 13 முதல் 16 வயது பிரிவு – 1.6.1997 முதல் 31.5.2001 வரை



 மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 044- 28192152, 29103195  
அரசுச் செயலாளர் / ஆணையர்(பொ) 



Wednesday, January 1, 2014

Honble Chief Minister Statement on EB Settlement.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அவர்களின் அறிக்கை – 1.1.2014 

      தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும்; சுமுகமான தொழில் உறவுகள் மேம்பட வேண்டும் என்பதிலும்; தொழிலாளர் சட்டதிட்டங்களின்படி அவர்களுக்குரிய பயன்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதிலும்; புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதிலும் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.


     பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதில் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் காலத்தே அளித்து வருகிறது.

     அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக் குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன்.அதன்படி ஊதிய மாற்றக் குழு ஒன்று 16.12.2011 அன்று அமைக்கப்பட்டது.

    இந்த ஊதிய மாற்றக் குழு, 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கீழ்க்காணும் ஊதிய உயர்வினை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்படி:

1) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும்.

2) இந்த ஏழு விழுக்காடு ஊதிய உயர்வு காரணமாக, ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 700 ரூபாயும், அதிகபட்சம் 13,160 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

3) பத்து ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால பயனாக ஓர் ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

4) தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொறுத்த வரையில், அரசாணை எண் 237, நிதித் துறை நாள் 22.7.2013-ன்படி தமிழக அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.


5) காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக்கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு (Stagnation increment) வழங்கப்படும்.
 
6) தற்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் (Scale of Pay and Grade Pay) மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.


7) தற்போதுள்ள படிகள் மற்றும் சிறப்பு ஊதியம் (Allowances and Special pay) மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.

8) தற்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு (Increment) தொடர்ந்து வழங்கப்படும்.

9) பணியில் சேர்பவர்களுக்கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும். பயிற்சி காலத்தில் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். தற்போது ஓராண்டிற்கு குறைவாக பயிற்சி காலம் உள்ள பதவிகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் (ஊதியம் மற்றும் தர ஊதியம்) வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.

10) இந்த ஊதிய உயர்வு 1.12.2011 முதல் நடைமுறைக்கு வரும். 1.12.2011 முதல் 31.12.2013 வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை ஜனவரி 2014-லும், இரண்டாவது தவணை ஏப்ரல் 2014-லும் வழங்கப்படும்.

11) இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் 1.12.2011 முதல் 30.11.2015 வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.

     இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70,820 பணியாளர்கள் மற்றும் 10,160 அதிகாரிகள் என மொத்தம் 80,980 பணியாளர்கள் பயன் பெறுவர்.

     இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 252 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்கும் வகையில் 525 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இச்செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும்.

     எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, அவர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் தங்கள் கடமைகளை ஆற்ற வழிவகுக்கும்.


 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்