Thursday, July 8, 2021

CM Announced Cash Incentive for Olympic Sportsmen

 ஜப்பான்‌ டோக்கியோவில்‌ நடைபெறவுள்ள ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ பங்கேற்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த தடகள வீரர்களுக்கு ஊக்கத்‌ தொகை - மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அறிவிப்பு.

Honble Chief Minister has announced cash incentive for Sportsmen from Tamil Nadu who are participating in the Olympics, Japan.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில்‌ ஆர்வத்தைப்‌ பெருக்கவும்‌ அவர்கள்‌ தேசிய மற்றும்‌ சர்வதேசப்‌ போட்டிகளில்‌ பங்குகொள்ளவும்‌ அரசு தேவையான பயிற்சிகளையும்‌, ஊக்கத்தொகைகளையும்‌ தொடர்ந்து வழங்கி வருகிறது.

அந்த வகையில்‌, ஜப்பான்‌ டோக்கியோவில்‌ 23.7.2021 முதல்‌ 8.8.2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ தடகள விளையாட்டில்‌ 4 % 400 மீட்டர்‌ தொடர்‌ ஓட்டத்தில்‌ ஆண்கள்‌ பிரிவில்‌ பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திரு. எஸ்‌. ஆரோக்கிய ராஜீவ்‌ மற்றும்‌ திரு.நாகநாதன்‌ பாண்டி மற்றும்‌ 4 % 400 மீட்டர்‌ தொடர்‌ ஒட்டத்தில்‌ கலப்புப்‌ பிரிவில்‌ செல்வி.சுபா வெங்கடேசன்‌, செல்வி. தனலஷ்மி சேகர்‌ மற்றும்‌ செல்வி. ரேவதி வீரமணி என மொத்தம்‌ 5 தடகள வீரர்களுக்கு அரசின்‌ சிறப்பு ஊக்கத்‌ தொகையாக தலா ரூபாய்‌ 5 இலட்சம்‌ வீதம்‌ ரூபாய்‌ 25 இலட்சம்‌ வழங்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

இவ்வீரர்களில்‌, திரு. எஸ்‌. ஆரோக்கிய ராஜீவ்‌ அவர்கள்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்‌ தொகை வழங்கும்‌ திட்டம்‌, செல்வி. சுபா வெங்கடேசன்‌ அவர்கள்‌ சர்வதேச அளவிலான போட்டிகளில்‌ பதக்கங்கள்‌ வெல்வதற்கு ஊக்குவிக்கும்‌ திட்டம்‌ ஆகிய உயரிய திட்டங்களின்கீழ்ப்‌ பயிற்சி பெற்றவர்களாவார்கள்‌.

ஏற்கனவே, ஜப்பான்‌, டோக்கியோ ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 6 வீரர்களுக்குத்‌ தலா ரூபாய்‌ 5 இலட்சம்‌ வீதம்‌ மொத்தம்‌ ரூபாய்‌ 30 இலட்சம்‌ அரசின்‌ சிறப்பு ஊக்கத்தொகையினைக்‌ கடந்த 26-6-2021 அன்றும்‌, மேலும்‌ ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி.சி.ஏ. பவானி தேவி அவர்களுக்கு ரூபாய்‌ 5 லட்சம்‌ சிறப்பு ஊக்கத்‌ தொகையினை 20- 6- 2021 அன்றும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, July 7, 2021

Honble Minister Statement for Water Resources on Mekedatu issue

 காவேரி ஆற்றின்‌ குறுக்கே மேகதாதுவில்‌ அணைக்கட்டும்‌ திட்டத்தை சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும்‌ என்று கர்நாடகா முதலமைச்சர்‌ திரு எடியூரப்பா அவர்கள்‌ தொலைக்காட்சி மற்றும்‌ நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்‌.

இந்நிலையில்‌, மேகதாது பிரச்சனைக்‌ குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஜீலை 4-ஆம்‌ தேதி கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய பதில்‌ கடிதத்தில்‌ தமிழ்நாடு விவசாயிகள்‌ இலட்சக்கணக்கான ஏக்கரில்‌ குறுவை மற்றும்‌ சம்பா நெல்‌ பயிர்‌ செய்வதற்கு காவேரி நீரையே நம்பியிருக்கும்‌ நிலையில்‌ அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்‌ மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும்‌. அதை செயல்படுத்தக்‌ கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாட்டு விவசாயிகளின்‌ நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளையும்‌ தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும்‌ தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்‌.


இவ்வாறு தனது அறிக்கையில்‌ மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ திரு. துரைமுருகன்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

On suspension of 3 Engineers - Highways and Minor Ports Department

 தரமற்ற சாலைகள்‌ அமைத்த நெடுஞ்சாலைத்துறை 3 பொறியாளர்கள்‌ தற்காலிக பணி நீக்கம்‌

சிவகங்கை மாவட்டம்‌, ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம்‌ இடையே தரமற்ற சாலைகள்‌ அமைக்கப்படுவதாக மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ அவர்களுக்கு புகார்‌ வந்தது. அப்புகாரின்‌ அடிப்படையில்‌ மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அச்சாலையை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌. அதன்பேரில்‌, சாலை பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுபாடு குழுவினருடன்‌ நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர்‌ திருமதி.கீதா அவர்கள்‌ சிவகங்கை மாவட்டம்‌, ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம்‌ இடையே அமைக்கப்பட்ட சாலைப்‌ பணிகளை நேரில்‌ ஆய்வும்‌ முறையான விசாரணையும்‌ மேற்கொண்டார்‌.

அந்த ஆய்வில்‌ சாலையின்‌ தரம்‌ மற்றும்‌ அமைப்பில்‌ குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள்‌ அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப்பொறியாளர்‌ திரு. மாரியப்பன்‌, உதவி பொறியாளர்‌ திரு.மருதுபாண்டி மற்றும்‌ தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர்‌ திரு.நவநீதி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம்‌ செய்து நெடுஞ்சாலைத்‌ துறை கண்காணிப்பு பொறியாளர்‌ (கட்டுமானம்‌ மற்றும்‌ பராமரிப்பு) திரு.செந்தில்‌ அவர்கள்‌ உத்திரவிட்டுள்ளார்கள்‌. மேலும்‌, சாலை பணி ஒப்பந்ததாரர்‌ தர்ஷன்‌ அன்ட்‌ கோ-வின்‌ ஒப்பந்தத்தை ரத்து செய்தும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு நெடுஞ்சாலைத்‌ துறை செய்தி குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM announced that financial assistance to the University of Cologne, Germany

 ஜெர்மனியில்‌ அமைந்துள்ள கொலோன்‌ பல்கலைக்கழகத்தின்‌ தமிழ்த்‌ துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அறிவிப்பு.

Honble Chief Minister has announced that financial assistance would be extended to the Department of Tamil at the University of Cologne, Germany.



தமிழ்‌ மொழியின்‌ வளர்ச்சியில்‌, ஜெர்மனியில்‌ உள்ள கொலோன்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள தமிழ்ப்‌ பிரிவும்‌ முக்கியப்‌ பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில்‌ இந்தியவியல்‌, தமிழியில்‌ ஆய்வு நிறுவனம்‌ 1963ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம்‌ ஆண்டு கொலோன்‌ பல்கலைக்கழகத்தின்‌ தமிழ்த்‌ துறைக்கு உருவான நிதிப்பற்றாக்குறையால்‌, அங்கு பணிபுரிந்த தமிழ்ப்‌ பேராசிரியர்‌ திரு.உல்ரிக்க நிக்லாஸ்‌ அவர்கள்‌ செப்டம்பர்‌ 2020இல்‌ ஒய்வு பெற்றபின்‌, தமிழ்ப்‌ பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம்‌ அறிவித்தது. அந்த சமயத்தில்‌, அமெரிக்கவாழ்‌ இந்தியர்கள்‌ தமிழ்த்‌ துறை தொடர்ந்து இயங்குவதற்குத்‌ தேவையான நிதியில்‌ பாதியைத்‌ திரட்டி கொலோன்‌ பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால்‌, தமிழ்ப்‌ பிரிவை மூடும்‌ முடிவு ஜூன்‌ 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது.


கொலோன்‌ பல்கலைக்கழக தமிழ்த்‌ துறைக்கு தேவையான நிதியில்‌ 1 கோடியே 25 இலட்சம்‌ ரூபாயை, 2019இல்‌ முந்தைய ஆட்சியாளர்கள்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில்‌, அதனை உடனடியாக அளித்து அப்பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமென, அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ வலியுறுத்தியிருந்தார்கள்‌.


எனினும்‌, தமிழக அரசால்‌ அறிவிக்கப்பட்ட அத்தொகை விடுவிக்கப்படாததை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, கொலோன்‌ பல்கலைக்கழக தமிழ்த்‌ துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட ஏதுவாக, தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ ஒரு கோடியே 25 இலட்சம்‌ ரூபாயை உடனடியாக கொலோன்‌ பல்கலைக்கழக தமிழ்த்‌ துறைக்கு வழங்கிட இன்று (7.7.2021) உத்தரவிட்டுள்ளார்கள்‌.


முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ வழியில்‌ செயல்பட்டு வரும்‌ இவ்வரசு, இப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கொலோன்‌ பல்கலைக்கழக தமிழ்த்‌ துறை இன்னும்‌ இரண்டு ஆண்டுகளில்‌ 60 ஆண்டுகளைக்‌ காணும்‌ நல்வாய்ப்பிற்கு உதவிடும்‌ என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம்‌ போன்றவற்றை உலகளவில்‌ பரவிட என்றென்றும்‌ துணை நிற்கும்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Company CEOs called on the Honble Chief Minister

    Mr Ken Kang, Southwest Asia President and CEO, Samsung Electronics Company called on the Honble Chief Minister.



   Tamil Nadu PR Thiru Noel Tata, Chairman, Trent and Tata Investment Corporation called on the Honble Chief Minister.