Showing posts with label Bharat Ratna Dr.APJ Abdul Kalams Birth Day Celebrations in Chennai. Show all posts
Showing posts with label Bharat Ratna Dr.APJ Abdul Kalams Birth Day Celebrations in Chennai. Show all posts

Wednesday, October 14, 2015

Bharat Ratna Dr.APJ Abdul Kalams Birth Day Celebrations in Chennai

‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும், ‘அணுசக்தி நாயகன்’ என்றும்
‘தலைசிறந்த விஞ்ஞானி’ என்றும் ‘திருக்குறள் வழி நடந்தவர்’ என்றும்,
‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ என்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது. டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினர் மற்றும் மாணாக்கர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்து சக்தியாக விளங்கினார். எனவே திரு. APJ அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ஆம் நாள் ‘இளைஞர் எழுச்சி நாள்’ என தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட வேண்டுமென, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி பாரத ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15-ஆம் நாள் ‘இளைஞர் எழுச்சி நாள்’ ஆக கொண்டாடப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு ஆணையிட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்படி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15.10.2015 அன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் ஆகியோர் பங்கேற்கும் இளைஞர் பேரணி காலை 9 மணிக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 மாணவ மாணவியர் இந்தப் பேரணியில் பங்கேற்பர். இவர்கள் இளைஞர் எழுச்சி நாள் தொடர்பான பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் செல்வர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு அறிவியல் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் 13.10.2015 அன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு சென்னையில் 15.10.2015 அன்று நடைபெறும் அரசு விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் பரிசுகள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி 13.10.2015 அன்று நடத்தப்பட்டு அதில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் மாநில அளவில் சென்னையில் 14.10.2015 மற்றும் 15.10.2015 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தெரிந்தெடுக்கப்பட்டனர்.

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி 14.10.2015 மற்றும் 15.10.2015 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 102 அறிவியல் காட்சிப் பொருட்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் 14.10.2015 மற்றும் 15.10.2015 ஆகிய தேதிகளில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானிகள் விண்வெளியியல் குறித்து உரையாற்றுகின்றனர்.

15.10.2015 அன்று பிற்பகல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் நாட்டு வளர்ச்சி குறித்த முன்னேற்ற சிந்தனைகள் பற்றிய உரைகள் நிகழ்த்தப்படும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் 15.10.2015 அன்று டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் படித்த பள்ளியிலிருந்து அவர் வசித்த இல்லம் வரை மாணவ மாணவியர் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்.

15.10.2015 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக சி.யூ.ஐ.சி அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பாரத ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெறும். இந்த விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவார்கள். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவார்கள். மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவார்கள். இந்த விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.