Showing posts with label CM Sanctions Additional Funds for Green House Scheme.. Show all posts
Showing posts with label CM Sanctions Additional Funds for Green House Scheme.. Show all posts

Wednesday, July 31, 2013

CM Sanctions Additional Funds for Green House Scheme.

          வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. 

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்தின்படி சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 60,000 வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட இலக்கினை நிர்ணயித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். இந்த ஆணைக்கிணங்க 2011-2012 ஆம் ஆண்டு 1080 கோடி ரூபாய் செலவில் 60,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2012-2013 ஆம் ஆண்டிற்கான இலக்கான 60,000 வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளன. 



            இன்றைய சூழ்நிலையில் வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகையை 2013-2014 ஆம் ஆண்டு முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகையில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டட பணிகளுக்கும், 30 ஆயிரம் ரூபாய் சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதற்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு இலக்கான 60,000 பசுமை வீடுகள் கட்டுவதற்காக 1260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்ஆணையிட்டுள்ளார்கள்.  அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். 

******
வெளியீடு: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 
நாள் 31 .7.2013